Friday 3rd of May 2024 11:32:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஹிஷாலினியின் மரணத்துக்கான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!

ஹிஷாலினியின் மரணத்துக்கான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!


ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும், முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டிலே பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உட்பட்டு, கடந்த 15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணமும் அதைத் தொடர்ந்து வெளிவருகின்ற தகவல்களும் முழு நாட்டு மக்களுக்கும் மிகவும் வேதனையை அளிக்கின்றதாக இருக்கின்றது.

ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தெரிவித்து நிற்பதோடு, அவர்களது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

இந்தத் துயர் செயலை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும், முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் இச்சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக நாம் வேண்டி நிற்கின்றோம்.

வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கல்வியைத் தொடர முடியாது சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதும், பல்வேறு வகையான துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு சிறார்கள் முகம்கொடுப்பதும் அண்மைய காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருக்கின்றன. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களது கல்வி உரிமைகள் தொடர்பான நாட்டின் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தபடுவதனை வலியுறுத்துகின்றோம்.

தொடர்ந்தும் எதிர்காலத்தில் இவ்விதமான அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்க அரசு மற்றும் அதிகாரிகளோடு பொதுமக்களும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்" - என்றுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE